COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

நாயுருவி

வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.

செந்நாயுருவி
விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.

மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.

இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.
மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது 
பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. 
தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது.

காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம்.

நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .பல் போடி செய்யும் முறை 

நாயுருவி வேர் - 100 கிராம் 
கடுக்காய் - 50 கிராம் 
நெல்லிக்காய் - 50 கிராம்  
தான்றிக்காய் - 50 கிராம் 
ஏல அரிசி - 20 கிராம் 
கிராம்பு - 50 கிராம் 
சுக்கு - 50கிராம் 
கருவேலப்பட்டை - 50கிராம் 
இந்துப்பு - 50 கிராம்

உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும். 
இன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .
நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

நவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும்   புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.
விதையை சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

9 கருத்துகள்:

MANAGURUNATHAN சொன்னது…

நாயுருவி அரிசி கோயம்புத்தூர் / பெங்களுரில் எங்கு கிடைக்கும். தாங்கள் கொரியரில் அனுப்ப முடியுமா?

Varikuyil சொன்னது…

பதிவிற்கு நன்றியும் வணக்கங்களும் ஐயா. விதைகள் மிகவும் வழுவழுப்பாக உள்ளதால் பல வித முறைகளில் முயன்றும் தோல் எடுக்க முடியவில்லை.. தோல் நீக்கும் முறையை கூற முடியுமா பிளீஸ்

Unknown சொன்னது…

நல்ல செய்தி

Unknown சொன்னது…

புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் கிடைக்குமா கிடைக்குமெனில் முகவரி அனுப்பவும்

Shankar சொன்னது…

9952552555

Unknown சொன்னது…

சிறந்த பதிவு.தொடர்ந்து இதுபோன்ற தகவல்கள் கிடைக்க வேண்டும் !🌷🌹🌺🥀🙏

Unknown சொன்னது…

நன்று

பெயரில்லா சொன்னது…

🙏🙏🙏

Aradhya சொன்னது…

நாயுருவி பயன்கள் | Top 10 Nayuruvi Benefits in Tamil